20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 மனுக்களின் பிரதிகளையும், உச்ச நீதிமன்றம் தமக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
எனினும், இந்த சட்ட வரைவு, மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையிலேயே, இந்த திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.