வருண என்ற ரோந்துக் கப்பலை சிறிலங்காவிடம் நாளை கையளிக்கிறது இந்தியா
இந்தியக் கடலோரக் காவல்படையின் ஐசிஜிஎஸ் வருண என்ற ரோந்துக் கப்பல், சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.
கொச்சி கடற்படைத்தளத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வில், சிறிலங்கா கடலோரக் காவல்படையின் தளபதி றியர்அட்மிரல் சமந்த விமலதுங்க இந்தக் கப்பலைப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஐசிஜிஎஸ் வருண என்ற ரோந்துக்கப்பல் 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் நாள், அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்தினால் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இது, கடந்த ஓகஸ்ட் 23ஆம் நாள், இந்திய கடலோரக் காவல் படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு இந்தியா ரோந்துக் கப்பல்களை வழங்குவது இது முதல்முறையல்ல.
2010ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து நீக்கப்பட்ட ஐஎன்எஸ் சரயு என்ற போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டது. அது தற்போது, எஸ்எல்என்எஸ் சயுர என்ற பெயரில் சிறிலங்கா கடற்படையில் செயற்பட்டு வருகிறது.
இந்தியக் கடலோரக் காவல்படையில் ஐசிஜிஎஸ் வருண, 10,632 நாட்கள் பணியாற்றியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், இந்தக் கப்பலில் 720 அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
77 உயிர்களைக் காப்பாற்றியுள்ள இந்தக் கப்பல், 92.56 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை கைப்பற்றியுள்ளது. 22 வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளது.