முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 80 ஆகும்.
உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏ.எச்.எம். அஸ்வர் இன்று மாலை மரணமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர், 1950 ஆம் ஆண்டு லங்கா சமசமாசக் கட்சியின் ஊடாக அரசியலுக்கு வந்தார்.
1955ஆம் ஆண்டு இவர் ஐதேகவில் இணைந்தார். 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஏ.எச்.எம். அஸ்வர், 2008ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இதன் பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். இவர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.