சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா முயற்சி
சிறிலங்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய- அமெரிக்க உறவுகள் தொடர்பாக பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதுபற்றிக் கூறியுள்ளார்.
‘சிறிலங்கா, பங்களாதேஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் இராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிச்சயமாக இது மிகவும் முக்கியமானது.இந்திய பெருங்கடல் பிராந்தியம் தொடர்பாக இந்தியா பவுண்டேசன் நடத்தும் மிக முக்கியமான கருத்தரங்கு சிறிலங்காவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா தரப்பில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்பர்.
எமது கடற்படையின் ஈடுபாடுகளுக்கு இவை அனைத்தும் மிகவும் முக்கியமான முயற்சிகளாகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.