அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி கொழும்பு வருகிறார்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் வரும் 31ஆம் நாள் தொடக்கம், செப்ரெம்பர் 1ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
அலரி மாளிகையில் நடக்கவுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், உலகில் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்காவின் சார்பில், தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் பங்கேற்கவுள்ளார்.
வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள், அலிஸ் வெல்ஸ், கொழும்பில் நடக்கும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, அவர், சிறிலங்கா அரசின் அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து, பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.