மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு – விக்னேஸ்வரன் யோசனை
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“ஒன்பது மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டரைவு நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல் நடத்தும் வரை- காலாவதியாகும் மாகாணசபைகளின் பதவிக்காலத்துக்குப் பின்னர், அங்கு மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
கலைக்கப்பட்ட மாகாணசபைகளை தேர்தல் நடத்தும் வரையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அது அதிகாரப்பகிர்வு கோட்பாட்டுக்கு எதிரானது.
அத்தகைய சூழலில், மாகாணசபைகளின்- குறிப்பாக, வடக்கு , கிழக்கு மாகாண சபைகளின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டங்களை மத்திய அரசினால் வகுக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.