நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்கவுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்க மாத்திரமே, இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம், தாம் எழுப்பிய வினாவுக்கு, இந்தப் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.
சிறிலங்காவின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின்படி, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட முடியாது.
இரட்டைக் குடியுரிமை கொண்ட கீதா குமாரசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவரைத் தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அடுத்து, மேலும் பல இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்தே, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் பவ்ரல் அமைப்பு இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.