பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறையில் இருந்து வீடு செல்ல விடுமுறை
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனை, ஒரு மாதம் விடுமுறையில் (பரோல்) வீடு செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இது தொடர்பான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர், முதுமையடைந்துள்ள தனது தந்தையை காண்பதற்காக, சிறையில் இருந்து வீடு செல்ல விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் 30 நாட்களுக்கு விடுமுறையில் வீடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டதும், பேரறிவாளன் விரும்பிய நாளில் இருந்து தனது விடுமுறையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.