அனுராதபுர சிறையில் இரண்டாவது நாளாகவும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தம் மீதான வழக்குகளை ஏனைய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வழக்குகளை துரிதமாக விசாரிக்கக் கோரியும், நேற்றுமுன்தினம் காலை அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது-40), கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன் (வயது-30), நாவலப்பிட்டியைச் சேர்ந்த கணேசன் தர்சன் (வயது-26) ஆகிய மூவருமே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம் மீதான வழக்குகள் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் ஏனைய வழக்குகளும் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், ஏனைய நீதிமன்றங்களுக்கு வழக்குகளை மாற்றினால், மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இது தடுப்புக்காவலில் தொடர்ந்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இது தம்மை தண்டிப்பதற்கு பதிலாக பழிவாங்கும் செயல் என்று அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.