தவறு செய்தவர்கள் போர் வீரர்கள் அல்ல – சிறிலங்கா இராணுவத் தளபதி
வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச வானொலிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே, லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
“வடக்கிலுள்ள மக்கள் தீவிரவாதத்தை நிராகரித்துள்ளனர். வடக்கு-தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு சிறிலங்கா இராணுவம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் சமூகங்களுக்கிடையில் நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
ஆனால், சில குழுக்கள், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை குழப்பவும் முயற்சிக்கின்றன.
போர் வீரர்கள் மக்களின் மரியாதையைப் வென்றிருக்கின்ற ஒரு குழுவாகும். தவறு செய்தவர்களை போர் வீரர்கள் என்று அழைக்க முடியாது.
யாராவது குற்றம் செய்திருந்தால், அவர் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.