20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – மைத்திரியின் முடிவை மாற்றிய மகிந்தவின் கடிதம்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டமைக்கு, சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எழுதிய கடிதமே காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில், 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வருவதற்கான தீர்மானம் அமைச்சரவையில் ஒருமனதாக எடுக்கப்பட்டு, வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்தவாரம் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், இந்த திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் மாகாணசபைத் தேர்தல்களை பிற்போட வேண்டாம் என்றும், அது அரசியலமைப்பு மீறலாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு நாளை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ரத்துச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.