சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் மகிந்த – சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைகிறார்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
”அடுத்த மாதம் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளப் போவதாக, சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அடங்கியுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் புதிய கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியில் இணைந்து கொண்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர்களின் நாடாளுமன்றப் பதவிகளைப்ட பறிப்பதற்கான, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்.
எனினும், அவர்களை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக நீடிப்பதை உறுதி செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகிறது.
புதிய கட்சியின் நோக்கம், அரசாங்கத்தை கவிழ்ப்பது அல்ல. ஆனால் அதனை ஆட்டம் காணவைக்கும். பலவீனப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.