மேலும்

ரவி கருணாநாயக்கவுடன் ரணில் இரகசிய ஆலோசனை

ravi-karunanayakeசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மத்திய வங்கி பிணை முறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை வளையத்துக்குள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் சிக்கியுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறும் ரவி கருணாநாயக்கவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ranilஹட்டனில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ஐக்கிய தேசியக் கட்சியில் திருடர்கள் இல்லை. திருடர்களை எமது அரசாங்கம் பாதுகாக்காது.

எமது அரசாங்கத்தில் திருடர்கள் இருந்தால் அவர்கள் நீக்கப்படுவார்கள். யாரையும் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும் கூட, ரவி கருணாநாயக்கவை  பதவி விலக வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையிலேயே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை மாலை, ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேசியுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனும், ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *