சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
சிறிலங்காவில் உள்ள சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு செயலர், கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமையை சீன நிறுவனம் பெற்றுள்ள நிலையிலும், சீன இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த மாத இறுதியில் கொண்டாடப்பட்ட நிலையிலும், சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை நாளை கொழும்பு துறைமுகம் வரவுள்ள நிலையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காலிமுகத்திடல் விடுதியில் கடந்த ஜூலை 27ஆம் நாள் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றிய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய், சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள சீனா எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.