கொக்குவில் வாள்வெட்டு – மேலும் இரண்டு இளைஞர்கள் கைது
கொக்குவில் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் நாள் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர்- அரசடியைச் சேர்ந்த முத்து என அழைக்கப்படும், யோகராசா சாஜிஸ் (வயது-18), கோப்பாயைச் சேர்ந்த அருள் சீலன் பற்றிக் (வயது-18), ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 7 பேரை அடையாளம் கண்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கூறியிருந்தார்.
எனினும், அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிட சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் நேற்று மறுப்புத் தெரிவித்திருந்தார்.