மேலும்

கொக்குவில் வாள்வெட்டு – இரண்டு இளைஞர்கள் கைது

Arrestகொக்குவில் பகுதியில் நீதிமன்றக் கட்டளைகளை விநியோகிக்கச் சென்ற கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் மீது வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியவர்கள் என்ற சந்தேகத்தில், இரண்டு பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொக்குவில் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்த சிறிலங்கா காவல்துறை மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர, இந்த தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய கடைசி நபரைக் கைது செய்யும் வரையில் தேடுதல்கள், சோதனைகள் போன்ற தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இருந்து இரண்டு இளைஞர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தனர்.

நல்லுரைச் சேர்ந்த மது என அழைக்கப்படும் தவராசா மதுசன் (வயது -20) யாழ்ப்பாணம் காவல்துறையினராலும், மானிப்பாயைச் சேர்ந்த விஜயரத்தினம் சிவராஜ் ( வயது-23) கோப்பாய் காவல்துறையினராலும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று யாழ். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *