ராஜீவ் காந்தியின் சிறிலங்கா கொள்கை தோல்வி – மகாராஷ்டிர பாடநூலில் இருந்து நீக்கம்
மகாராஸ்டிர மாநில பாடநூல்களில் இடம்பெற்றிருந்த, சிறிலங்கா தொடர்பான கொள்கையில் ராஜீவ்காந்தியின் தோல்வி பற்றிய குறிப்புகளை அகற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில பாடசாலைகளில் ஒன்பதாம் தர மாணவர்களுக்கான வரலாறு மற்றும் அரசியல் விஞ்ஞான பாடநூலில், முன்னாள் இந்தியப் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.
ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் பற்றிய குறிப்புகளும், சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் கொள்கையின் தோல்வி பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தன.
இதற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி குடும்பத்தினரை பாஜக திட்டமிட்டு கேவலப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தநிலையில், இந்தக் குறிப்புகள் பாடநூல்களில் இருந்து நீக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் வினோத் தவ்டே மாநில சட்டமன்ற மேலவையில் நேற்று உறுதியளித்துள்ளார்.