எந்த நேரத்திலும் உங்களுடன் பாகிஸ்தான் நிற்கும் – மகிந்தவை உசுப்பேற்றிய ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்
எந்த நேரத்திலும் உங்களுடன் பாகிஸ்தான் நிற்கும் என்று, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ எனப்படும், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான, லெப்.ஜெனரல் றிஸ்வான் அக்தர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றுவதற்கான விருந்தினராக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை அவர் பாகிஸ்தானுக்குச் சென்றார்.
அங்கு, பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில், ‘சிறிலங்காவின் அமைதிக்கான போராட்டமும் பாகிஸ்தான் மற்றும் பிராந்தியத்துக்கான அதன் பாடங்களும்’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றியிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்சவை பாகிஸ்தானின், மூத்த படை அதிகாரிகள் பலரும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
தற்போது, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ள, பாகிஸ்தானின் சக்திவாய்ந்த புலனாய்வுப் பிரிவான ஐஎஸ்ஐயின், முன்னாள் தலைவர் லெப்.ஜெனரல் றிஸ்வான் அக்தரும், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே, எந்த வேளையிலும், பாகிஸ்தான் உங்களுடன் நிற்கும் என்று மகிந்த ராஜபக்சவிடம் அவர் கூறியுள்ளார்.