பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – இறக்குமதிக்குத் தயாராகிறது சிறிலங்கா அரசு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 40 வீதம் அறுவடை குறையும் என்று ஐ.நா உணவு விவசாய நிறுவனம் மற்றும் ஐ.நா உணவுத்திட்டம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறிலங்காவில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவில் நிலவும் வரட்சியால், நெல் விளைச்சல் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 686,000 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் 2.7 மில்லியன் மெட்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வரட்சியினால், 40 வீத நெல்“ உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குருநாகல, மொனராகல, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், சிறிலங்கா அரசாங்கம், 3 இலட்சம் தொடக்கம், 5 இலட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த 3 வாரங்களுக்குள் அரிசி இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சின் செயலர் சிந்தக லொகுஹெட்டி தெரிவித்தார்.
இது தொடர்பாக பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.