கூட்டுப்படைத் தளபதியாகிறார் லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு, கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை- ஜூன் 27ஆம் நாள் இந்த நியமனம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை நீடிப்பு வரும் ஓகஸ்ட் 22ஆம் நாளுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவருக்குப் புதிய பதவி வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, அண்மையில் ஓய்வு பெற்ற கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவுக்கு வெளிநாட்டில், இராஜதந்திரப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. அத்துடன் அவர் எயர் சீவ் மார்ஷலாகவும் பதவி உயர்த்தப்படவுள்ளார்.
அதேவேளை, கூட்டுப் படைகளின் தளபதியாக லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்படவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக தப்போதைய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு தொண்டர் படைகளின் தளபதியாக பதவியில் உள்ள மூப்பு நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவின் பெயரும், இராணுவத் தளபதி பதவிக்கான பரிசீலனையில் உள்ளது.