ஜேர்மனிக்கான தூதுவராக கருணாசேன ஹெற்றியாராச்சியை நியமிக்க நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை ஜேர்மனிக்கான தூதுவராக நியமிப்பதற்கான, ஒப்புதலை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அளித்துள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை ஜேர்மனிக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஜேர்மனி அரசின் ஒப்புதல் கிடைத்திருந்த நிலையில், உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவினால் அவர் நேர்முகத் தேர்வுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரை ஜேர்மனிக்கான தூதுவராக நியமிப்பதற்கு நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.
அத்துடன், பிரான்சுக்கான தூதுவராக புத்தி அதாவுடவை நியமிப்பதற்கும், உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது. இவர் அமெரிக்க குடியுரிமையையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கென்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் சி.தஹநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளது.
அவர் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
அதேவேளை, கென்யாவுக்கு துறைசார் இராஜதந்திரி ஒருவர் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.