ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீது சரத் வீரசேகர முறைப்பாடு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் றியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் மோனிகா பின்டோ ஆகியோர் சிறிலங்காவின் இறைமையை மீறி கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டி, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவர் ஜோக்கின் அலெக்சான்டர் மாசா மார்ரெல்லியிடம், றியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்றுமுன்தினம் மனுவொன்றை கையளித்தார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய போதும் அவர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ ஆகியோரின் அறிக்கைகள், முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலானவை, முரண்பாடானவை, ஐ.நா பிரகடனத்துக்கு எதிரானவை என்றும் அவர் கூறினார்.