ஆட்சிக் கவிழ்ப்புக்கான நடவடிக்கையை திருகோணமலையில் தொடங்குகிறார் மகிந்த
ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு, கூட்டு எதிரணியைப் பலப்படுத்தும், பரப்புரைகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச திருகோணமலையில் தொடங்கவுள்ளார்.
வரும் ஜூலை 3ஆம் நாள், மகிந்த ராஜபக்சவின் இந்த பரப்புரை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு இன்னமும் நாள் நிர்ணயிக்கப்படாத போதிலும், வரும் ஓகஸ்ட் மாதத்துடன், கிழக்கு, உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளின் ஆயுள்காலம் முடிவடையவுள்ளது.
எனவே அடுத்து வரும் மாதங்களில் மூன்று மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை தொடங்கவுள்ளார்.
கடந்த மே 1ஆம் நாள் கொழும்பில் நடந்த பிரமாண்ட மே நாள் பேரணியில், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.