விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து, பேரணி ஒன்று இடம்பெற்றது.
முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லம் நோக்கி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழரின் அரசியலைத் தலைமையேற்க வருக என்று அழைப்பு விடுக்கும் பதாதையுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் பெரும்பாலும் இளைஞர்களே காணப்பட்டனர். பேரணி முதலமைச்சரின் இல்லத்தை வந்தடைந்ததும், கூடியிருந்தவர்கள் மத்தியில் முதல்வர் விக்னேஸ்வரன் உரையாற்றினார்.
இதன்போது, அவர் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து தாம் சேவையாற்றுவேன் என்று கூறியதுடன், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்தே தமக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, கிளிநொச்சி நகரிலும், வவுனியா பேருந்து நிலையம் முன்பாகவும், முல்லைத்தீவிலும் முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டங்கள் இடம்பெற்றன.