நிபுணர்களுடன் இராணுவ விமானத்தை கொழும்புக்கு அனுப்புகிறது அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம்
சிறிலங்காவில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இராணுவ விமானம் ஒன்று, நிபுணர்களுடன் கொழும்பு வரவுள்ளது.
கடந்த மாதம் சிறிலங்காவில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், 300 பேர் வரை உயிரிழந்தனர். பெருமளவில் அழிவுகளை ஏற்படுத்திய இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க கடற்படையின் ஏவுகணைப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் லேக் எரி கடந்த 11ஆம் நாள் கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.
இந்தக் கப்பலில் வந்துள்ள அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருடன் இணைந்து, காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வாரங்கள் சிறிலங்காவில் தங்கியிருந்து இவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில், பசுபிக் கட்டளைப் பீடம் அனர்த்த உதவிப் பணிகளுக்காக இராணுவ விமானம் ஒன்றையும், நிபுணர்களையும் விரைவில் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நெருக்கடியான தருணத்தில் சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கிறது என்று அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினருடன் அமெரிக்க படைகள் ஒருங்கிணைந்து ஆதரவளிக்கும். அமெரிக்காவின் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து நாம் செயற்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.