சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தி குறித்து மகிந்த சமரசிங்கவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு
சிறிலங்காவின் துறைமுகங்கள், மற்றும் கப்பல் முறையை அபிவிருத்தி செய்வதில் இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக கொழும்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கவைச் சந்தித்து இதுதொடர்பாகப் பேச்சுக்களை நடத்தினார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சராக மகிந்த சமரசிங்க பொறுப்பேற்றிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க பேச்சுக்களை நடத்தி வரும் நிலையில், துறைமுகங்கள், கப்பல்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அவருடன் இந்தியத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி போன்றவற்றில் இந்தியா ஆர்வம்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.