சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா
சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
சிறிலங்கா நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், நிதியமைச்சின் செயலர் சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்கின்காவும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர்.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு 318 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியின் மூலம் சிறிலங்காவின் தென்பகுதி மற்றும் வடபகுதி தொடருந்துப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இந்தியாவில் இருந்து தொடருந்துகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
அதேவேளை, இந்தியா ஏற்கனவே சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 966 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு கடன் திட்டங்களை எக்சிம் வங்கி ஊடாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.