ஐ.நா பொதுச்செயலர், கொமன்வெல்த் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக்காலை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று ஐ.நா சமுத்திரவியல் கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் சிறிலங்கா பிரதமரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசைச் சந்தித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தினார்.
ஐ.நா பொதுச்செயலராக அன்ரனியோ குரெரெஸ் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா தலைவர் ஒருவர் அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அதேவேளை, இந்த மாநாட்டின் போது, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பற்றீசியா ஸ்கொட்லன்டையும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்துப் பேசினார்.