உதவிக் குழுக்களுடன் சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த இந்தப் போர்க் கப்பல்கள், அனர்த்தங்களை அடுத்து, உதவிப் பயணமாக கொழும்பு வந்துள்ளன. இந்தக் கப்பல்களில் 10 படகுகளில் தலா 5 பேர் கொண்ட மருத்துவக் குழுக்கள் வந்துள்ளன.
இந்த மருத்துவக் குழுக்கள் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபடவுள்ளன.
சாங் சுன், ஜிங் சோ, சாவோ ஹூ ஆகிய போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளன.
சாங் சுன் கப்பலில், 100 அதிகாரிகள் உள்ளிட்ட 200 கடற்படையினரும், ஜிங் சோ கப்பலில், 50 அதிகாரிகள் உள்ளிட்ட 178 கடற்படையினரும், சாவோ ஹூ கப்பலில் 54 அதிகாரிகள் மற்றும் 133 கடற்படையினரும், கொழும்பு வந்துள்ளனர்.
சீனக் கப்பல்களுக்குச் சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவிடம், சீனாவின் உதவிப் பொருட்கள் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டன.