சுங்க, துறைமுக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- அமெரிக்கா இடையே பேச்சு
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு தொடர்பாக வலுவான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட மகிந்த சமரசிங்கவுடன், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாக அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தகவல் வெளியிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவது தொட்பாக சீன நிறுவனத்துடன் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அவரை அமெரிக்க தூதுவர் நேற்று சந்தித்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் ரொட் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.