வெள்ள மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்கள்
சிறிலங்காவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள பிரிஆர்-80 ரக துருப்புக்காவி கவச வாகனங்கள் ஆழமற்ற நீர்ப்பரப்பிலும் பயணம் செய்யக் கூடியவை.
இந்த வகையான கவச வாகனங்களை மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக செல்லவுள்ள சிறிலங்கா படையினரின் பயன்பாட்டுக்காக, சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தி வைத்திருந்தது.
சிறிலங்காவின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நேற்றுமுன்தினம் பெய்த கடும் மழையை அடுத்து நேற்று ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிறிலங்கா இராணுவத்தின் மீட்புக் குழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
800 சிறிலங்கா இராணுவத்தினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.
அத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் இராணுவத்தினரின் ஆறு பிரிஆர் கவச வாகனங்களும் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
UN என பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கவசவாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.