பளை துப்பாக்கிச் சூடு- யாரும் சிக்கவில்லையாம்
பளை- கச்சார்வெளிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கச்சார்வெளி பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையான சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு – சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டன.
இதன்போது சம்பவ இடத்துக்கு அருகில் ரி-56 ரகத் துப்பாக்கியின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டினால், அந்தப் பகுதியில் இருந்த தொடருந்து சமிக்ஞை கம்பத்துக்கு சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.