கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்
இந்திய கடலோரக் காவல்படையின் சிஜிஎஸ் சூர் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், நல்லெண்ண மற்றும் பயிற்சிக்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியா- சிறிலங்கா நாடுகளின் கடலோரக் காவல்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையிலும், சிறி்லங்கா கடலோரக் காவல்படையின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் கொழும்பு வந்திருப்பதாக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடலோரக் காவல்படையினருடன் இணைந்து ஏப்ரல் 6ஆம் நாள், முழுவதும் கடல் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
கடந்த ஆண்டு இந்திய கடலோரக்காவல் படையின் 3 கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்திருந்தன. தற்போது இந்திய கடற்படையின் அய்வுக் கப்பலான தர்ஷக் சிறிலங்காவில் தரித்து நிற்கின்ற நிலையில், இந்திய கடலோரக் காவல் படைக்கப்பலும் கொழும்பு வந்திருக்கிறது.