ரஷ்யாவிடம் போர்க்கப்பல் கொள்வனவு சாத்தியமல்ல – சிறிலங்கா கடற்படை
ரஷ்யாவிடம் இருந்து ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை சிறிலங்கா கடற்படை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் சமஷ்டி சேவை பிரதித் தலைவர் மிகெய்ல் பெருக்கோவ், ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக்கிற்கு தெரிவித்திருந்தார்.
எனினும், 300 மில்லியன் டொலர் பெறுமதியான இந்தப் போர்க்கப்பல்களைக் கொள்வனவு செய்வது சாத்தியமான விடயமல்ல என்று சிறிலங்காகடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்று வரும் ஜூலை மாதம் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதில் பயிற்சிகளைப் பெறுவதற்காக சிறிலங்கா கடற்படை மாலுமிகள் இந்தியா செல்லவுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.