கீத் நொயார் கடத்தல் – 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை
2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்று தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஒரு மேஜர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கடந்த மாதமும், ஒருவர் கடந்த வாரமும், கீத் நொயார் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மேஜர் தர அதிகாரிக்கு நெருக்கமான பெண் ஒருவரின்- பிலியந்தலவில் உள்ள வீட்டில் இருந்து, நேற்று வான் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த வாகனமே கீத் நொயாரைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும் ஒரு மில்லியன் ரூபா பிணையில் கல்கிசை நீதிவான் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் இன்று நீதிமன்றத்தில் கீத் நொயார் முன்னிலையாகாததால் அடையாள அணிவகுப்பும் ரத்துச் செய்யப்பட்டது.