மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்திய செயிட் அல் ஹுசேன் – பதிலளிக்காது நழுவியது சிறிலங்கா

unhrc-lankaசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கை தொடர்பாக சிறிலங்கா நழுவலான பதிலையே அளித்துள்ளது.

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அறிக்கையை முன்வைத்தார்.

“மோசமான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதில் சிறிலங்கா தோல்வியடைந்துள்ளதானது, ஒரு பரந்துபட்ட தயக்கத்தை பிரதிபலிப்பதாக அல்லது, பாதுகாப்புப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாக தோன்றுகிறது.

கடந்தகால மீறல்கள் தொடர்பாக நீதிமுறைமையின் நம்பகத்தன்மை குறைபாடு மற்றும் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைக்கு முடிவுகட்ட விரும்பமின்மை அல்லது இயலாமை காரணமாக, நீதிப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு தேவைப்படுகிறது.

இது நம்பகமானதாக இருப்பதற்கு, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்கள், அங்கீகரிக்கப்பட்ட சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக ஒரு சிறப்பு நீதிமன்றம்,  அமைக்கப்பட வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

unhrc-lanka

அதையடுத்து. அந்த அறிக்கை மீது விவாதம் இடம்பெற்றது. இதன்போது சிறிலங்காவுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், ஹர்ஷ டி சில்வா வெளிநாட்டு நீதிபதிகள் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை பற்றி எதையும் கூறவில்லை.

“எமது சமூகத்தின் எல்லாத் தரப்பினருடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி புதிய பொறிமுறைகள் உருவாக்கப்படும்.  அனைத்துலக நிபுணத்துவத்தையும், உதவியையும்  நாம் கோருவோம். அந்தப் பொறுப்பை எல்லா நாடுகளும் நிறைவேற்ற முடியும்.” என்று மாத்திரம் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையை சிறிலங்கா பகிரங்கமாக நிராகரிக்காத போதிலும், வெளிநாட்டு நிபுணத்துவமும், உதவியும் மாத்திரம் கோரப்படும் என்று கூறி நழுவியுள்ளது.

அதேவேளை, அறிக்கை மீதான விவாதத்தின் முடிவில் பதிலுரை ஆற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய பரிந்துரை தொடர்பாக கூறும் போது, கலப்பு நீதிமன்றம் என்ற பதத்தையும் பயன்படுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *