இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் ஆரம்பம்
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் சிறிலங்கா- இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுக்களில் ஆறாவது கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்தப் பேச்சுக்கள் மார்ச் 24 ஆம் நாள் வரை இடம்பெறும்.
மேஜர் ஜெனரல் சஞ்சய தாபா தலைமையிலான இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவும், மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன தலைமையிலான சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குழுவும், இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கின்றன.
சிறிலங்கா தரப்புக் குழுவில் மேஜர் ஜெனரல் ஜெயசுந்தர, மேஜர் ஜெனரல் பண்டார, பிரிகேடியர் ரவிப்பிரிய, பிரிகேடியர் ராஜபத்திரன, பிரிகேடியர் ஈஸ்வரன், பிரிகேடியர் ஜெயசிங்க, கேணல், விக்கிரமசேன, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவில், லெப்.கேணல் சித்தார்த் தோமர், லெப்.கேணல் கிளயர், மேஜர் சந்தீப் பரத்வாஜ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.