சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவில்லை – மறுக்கிறது அவரது செயலகம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பௌத்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்று மறுத்துள்ளது.
பீகாரில் உள்ள நவ நாலந்தா மகாவிகாரை ஏற்பாடு செய்துள்ள அனைத்துலக பௌத்த மாநாடு ஒன்றில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவுடன் பங்கேற்கவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அதிபர் செயலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த சிலநாட்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதும் சிறிலங்கா அதிபரிடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் உறுதிப்படுத்தாமல் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.