சுமந்திரன் கொலை முயற்சி – அவுஸ்ரேலியாவில் உள்ள சந்தேகநபருக்கு அனைத்துலக பிடியாணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக, அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் ஆனந்தராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மார்ச் 22 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, இந்தப் படுகொலைச் சதியுடன் தொடர்புடைய சந்தேகநபரான கண்ணன் அல்லது அனோஜன் அல்லது வெற்றி எனப்படுபவர், அவுஸ்ரேலியாவில் வசிப்பதாகவும், அவரைக் கைது செய்ய அனைத்துலக பிடியாணை பிறப்பிக்குமாறும், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரினர்.
இதையடுத்து, கண்ணன் அல்லது அனோஜன் அல்லது வெற்றி என்ற சந்தேக நபரைக் கைது செய்வதற்கான அனைத்துலக பிடியாணை உத்தரவை கிளிநோச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பிறப்பித்துள்ளார்.