புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தங்கள்- கூட்டமைப்புக்கு வாக்குறுதி
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த சில குறிப்பிட்ட கரிசனைக்குரிய விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் என்று தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு உறுதியளித்துள்ளது.
இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக சில கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன. அந்த விடயங்கள் திருத்தப்படும் என்று எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் தொடர்பான விதிகள், ஒப்புதல் வாக்குமூலத்தை குற்றத்துக்கான ஆதாரமாக பயன்படுத்தல், கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்து சட்ட உதவியைப் பெறுதல் ஆகியன குறித்தே நாம் கரிசனை எழுப்பியுள்ளோம்.
இன்னொரு மிகவும் முக்கியமானதொரு விடயமும் உள்ளது, அது பயங்கரவாதம் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கமாகும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூல வரைவில் ஆறு பக்கங்களில் இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக உடன்பாடுகளுக்கு அமைவாக உள்ள குறிப்பிட்ட வரைவுகளின் அடிப்படையில், மாற்று வரைவு ஒன்றை உருவாக்குமாறு நாம் கோரியுள்ளோம். அந்த மாற்றம் செய்யப்படும் என்று நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.