விசாரணையை துரிதப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (மார்ச் 06) இரவு கச்சதீவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு தாம் பொறுப்பல்ல என்று சிறிலங்கா கடற்படை கூறிய போதிலும், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளது.
இந்த நிலையிலேயே விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு இந்தியா தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின், பேச்சாளர் கோபால் பக்லே, இந்த விடயத்தில் உள்ள மனிதாபிமான அம்சத்தைக் கவனத்தில் கொண்டு, தீவிரமாகவும், ஈர்ப்புடனும், விசாரணை மிகமிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்று குறிப்பிட்டார்.