மேலும்

ஜகார்த்தா வரை எதிரொலித்த தமிழ்நாடு மீனவர் படுகொலை விவகாரம்

India-srilanka-Flagதமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று நடந்த இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, இந்திய துணை குடியரசுத் தலைவருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது, கச்சதீவு கடலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் சுடப்பட்ட விவகாரம் குறித்து, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதன் போது, இந்தச் சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்துமாறும் தாம் உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் தம்மிடம் தெரிவித்தார் என்று இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தாவில் இருந்து புதுடெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் ஏஎன்ஐ செய்தியாளருக்கு அளித்த செவ்வியில், “இன்று காலை இந்தச் சம்பவம் பற்றி தாம் கேள்வியுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேசியதாகவும் சிறிலங்கா அதிபர் கூறினார்.

சிறிலங்கா கடற்படையினர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என்று, கடற்படைத் தளபதி தம்மிடம் தெரிவித்தார் என்றும் சிறிலங்கா அதிபர் கூறினார்” என்று ஹமீத் அன்சாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *