இன்று இந்தோனேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
21 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாடு நாளை நடைபெறவுள்ளது.
இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தோனேசியா சென்றுள்ளார். ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மங்கள சமரவீர அங்கிருந்து ஜகார்த்தாவுக்குப் பயணமாகியுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்குப் புறம்பாக பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் மங்கள சமரவீர இருதரப்பு பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.