இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல் சிறிலங்காவுக்கு இரண்டு மாதப் பயணம்
இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது.
இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகத்தின் கீழ் செயற்படும் இந்த ஆய்வுக் கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, கடந்த மார்ச் 3ஆம் நாள் சிறிலங்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்தக் கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, இரண்டு கூட்டு நீர்ப்பரப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியக் கடற்படையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையினர், ஐஎன்எஸ் தர்ஷக் கப்பலில், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன், சிறிலங்கா கடற்படையின் ஆய்வுப் பயிற்சிநெறி அதிகாரிகளுக்கு மேலதிக நீர்ப்பரப்பு செயல்முறை விளக்கங்களும் இந்தக் கப்பலில் அளிக்கப்படவுள்ளது.
கொழும்பு, காலி துறைமுகங்களுக்குச் செல்லவுள்ள இந்தியக் கடற்படைக் கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பல கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியக் கடற்படையின் சிறப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக்கில், பல்வேறு அதிநவீன ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலதிகமாக செடெக் உலங்கு வானூர்தி ஒன்றும் இந்தக் கப்பலில் தரித்து நிற்கும் வசதிகளும் உள்ளன.
கப்டன் பியூஸ் பௌசி தலைமையிலான இந்தக் கப்பலில் 20 அதிகாரிகள் மற்றும் 200 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.