பிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் சம்பந்தனை சந்திப்பு
பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் சிறியளவில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த தீர்மான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரினால், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது வழங்கப்பட வேண்டும்.
ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இழப்பீடு, மீள நிகழாமை, பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் பிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் மூவருடன், சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவரும் கலந்து கொண்டார்.