அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டம் – பெயருக்கு முன் பயன்படுத்த ரணில் தடை
அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது.
டீக்கின் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜோன் ஸ்ரான்ஹோப் இந்தப் பட்டத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினார்.
நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதார நிலை, கல்வி, மனித உரிமைகள் நிலையை உயர்த்துவதற்குப் பாடுபட்டதற்காகவே இந்த கௌரவ கலாநிதி பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மல்கம் பிரேசர், சாம்பியாவின் முன்னாள் அதிபர் கென்னத் கௌண்டா, அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கிலார்ட் ஆகியோர் இதற்கு முன்னர் டீக்கின் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதி பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்று பல்கலைக்கழகத்தின் சட்ட நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் அத்துல பதிநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கௌரவ கலாநிதி பட்டமளிப்பு விழா முடிந்தவுடன், இந்த கலாநிதி பட்டத்தை, அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட விடயங்களில் தனது பெயருக்கு முன்பாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு, பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்கவுக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.