சீனாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறது சிறிலங்கா – மங்கள சமரவீர
சீனாவுடன் நெருங்கிய வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விருப்பம் கொண்டுள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்று வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சீனா உலகில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. சிறிலங்காவில் சீனா பெருமளவில் முதலீடுகளைச் செய்துள்ளது.
அம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயம் ஒன்றில் சீனா முதலீடு செய்துள்ளது. இதில் எந்த நாடும் முதலீடு செய்ய முடியும்.
இந்த வலயங்கள் சீனாவின் நிதியில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், ஏனைய நாடுகளும் முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம்.
இதற்குள் உலகம் வருவதை காண நாம் விரும்புகிறோம்.
முதலீடுகளுக்குச் சிறந்த இடமாக சிறிலங்கா விளங்குகிறது. எனவே, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
திருகோணமலை மற்றும் ஏனைய துறைமுகங்களிலும், அனைத்துலக முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.