அரசகாணியிலேயே உள்ளதாம் கேப்பாப்புலவு விமானப்படை முகாம்
அரச காணியிலேயே கேப்பாப்புலவில் சிறிலங்கா விமானப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்புலவு விமானப்படை முகாம் முன்பாக 10 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன,
“கேப்பாப்புலவு பிரச்சினை தொடர்பாக, அங்குள்ள மக்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளோம். இரு வாரங்களுக்கு முன்னர் 243 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. வவுனியாவில் 16 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம்.
மக்கள் உறுதிப்படுத்தியமைக்கமைய அவர்களின் காணிகளை இராணுவம் விடுவித்து வருகிறது. இங்கும் பொதுமக்கள் தமது சொந்த இடம் என்பதை நிரூபித்தால் தேவையான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ள தயாராக இருக்கிறது.
தற்பொழுது படை முகாம் அமைந்துள்ள இடம் அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதியாகும். இது வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழே வருகிறது.
யாராவது இந்த காணி தம்முடையது என ஆதாரங்களுடன் நிரூபித்தால் விமானப்படை அதற்கான ஒழுங்குகளை செய்யும். பிரதேச செயலகத்தினூடாக மக்களுக்கு உறுதிகளை சமர்ப்பிக்க முடியும்.
உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தியும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வேறு நோக்கத்தில் இவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் நோக்கத்தில் இதனை செய்கின்றனரா என்று தெரியாது.
2009 ஆம் ஆண்டு முதல் கேப்பாப்புலவில் இந்த பிரச்சினை வரவில்லை. இது அரசாங்க காணி என்ற அறிவுறுத்தலின் பிரகாரமே இங்கு முகாம் அமைக்கப்பட்டது“ என்று குறிப்பிட்டார்.