சிறிலங்கா அதிகாரிகள் குழு புதுடெல்லி விரைவு
மீனவர்களின் விவகாரம் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவின் அதிகாரிகள் குழுவொன்று இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.
சிறிலங்கா கடற்றொழில் அமைச்சின் செயலர் மங்கலிக அதிகாரி தலைமையிலான இந்தக் குழுவில், சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
இந்திய- சிறிலங்கா அதிகாரிகளுக்கு இடையிலான இந்தப் பேச்சுக்கள் புதுடெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.
மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையில், கடந்த நொவம்பர் மாதம் புதுடெல்லியில் முதல்கட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது கட்ட இராஜதந்திரப் பேச்சுக்கள் வரும் ஜனவரி 2ஆம் நாள் கொழும்பில் நடைபெறவுள்ளன.
அதற்கு முன்னோடியாகவே, புதுடெல்லியில் பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அதிகாரிகள் குழு இந்தியா சென்றுள்ளது.
வரும் ஜனவரி 2ஆம் நாள் கொழும்பில் நடக்கவுள்ள இரண்டாவது கட்ட இராஜதந்திரப் பேச்சுக்களில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோரை உள்ளடக்கிய குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.