சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்
அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
சீன முதலீட்டாளர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று அம்பாந்தோட்டை சித்ரகல சந்தியில் பெருமளவு பொதுமக்கள் ஆர்ப்பாட்டததில் ஈடுபட்டனர்.
அம்பாந்தோட்டை நகரம் மற்றும் துறைமுகத்துக்குச் செல்லும் வீதிகளை மறித்து இவர்கள் நடத்திய போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர், நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும், மாவட்டச் செயலக அதிகாரிகளும் பேரகமவுக்கு சென்றிருந்த போது, அவர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
தாம் பல பத்தாண்டுகளாக வாழுகின்ற நிலங்களை சீனர்களுக்கு விற்கப் போவதில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையிலே, நேற்று அம்பாந்தோட்டையில் வீதிமறியல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று 7ஆவது நாளாக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.